துபாயின் இளவரசர் துபாய் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் பயோமெட்ரிக் செக்-இன் தொழில்நுட்பத்தை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
பயோமெட்ரிக்ஸ் மூலம் ஹோட்டல் செக்-இன்:
துபாயில் ஹோட்டல் செக்-இன் செய்வதில் இனி கஷ்டமில்லை. ஒருமுறை மட்டும் உங்கள் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் தகவலைப் பதிவேற்றினால் போதும். அடுத்த முறை வரும்போது எளிதாக, தொடுதலில்லா முறையில் (Contactless) செக்-இன் செய்து கொள்ளலாம்.
முக்கிய அம்சங்கள்:
துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் இந்தத் தொடுதலில்லா செக்-இன் முறையை அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
விருந்தினர்கள் ஹோட்டலுக்கு வருவதற்கு முன்பே, தங்கள் மொபைல் போன் மூலமாகவே செக்-இன் நடைமுறைகளை முடித்துக் கொள்ளலாம்.
அடையாள ஆவணம் மற்றும் பயோமெட்ரிக் தகவலை ஒருமுறை மட்டும் பாதுகாப்பாகப் பதிவேற்றினால் போதும். இது செக்-இன் நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.
மீண்டும் வரும்போது, பதிவு செய்த அடையாளம் (ID) காலாவதியாகும் வரை, முகத்தை அடையாளம் காண்பது போன்ற (Facial Recognition) விரைவான அங்கீகாரம் மட்டும் செய்தால் போதும். ஒவ்வொரு முறையும் முன் வரவேற்பறையில் காத்திருக்கத் தேவையில்லை. இந்த முறை துபாயில் உள்ள ஹோட்டல்களில் அமலுக்கு வரவுள்ளது.
வரும் காலங்களில் கார் வாடகை போன்ற மற்ற சுற்றுலாத் துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.
துபாய் சுற்றுலாத் துறை:
உலகத் தரம் வாய்ந்த 820 ஹோட்டல்களுடன் துபாயின் விருந்தோம்பல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 2025ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில், துபாய்க்கு 15.70 மில்லியன் சர்வதேசப் பயணிகள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5% அதிகம்.
இதுகுறித்து துபாய் இளவரசர் கூறுகையில், “இந்த அதிநவீன தொழில்நுட்பம் சுற்றுலாப் பயணத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், துபாயின் நிலையான சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும்,” என்றார்.
