09-09-2029 முதல் துபாய் மெட்ரோ BLUE LINE; AED 20.5 பில்லியனில்  மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

மிகவும் எதிர்பார்க்கப்படும் துபாய் மெட்ரோ BLUE LINE திட்டம் 9-9-2029 முதல் துவங்கும் என துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்காக RTA, AED 20.5 பில்லியன் கட்டுமான ஒப்பந்தத்தை மூன்று முக்கிய துருக்கிய மற்றும் சீன நிறுவனங்களான Mapa, Limak மற்றும் CRRC ஆகிய நிறுவனங்களுடன் இடப்பட்டுள்ளது.

மெட்ரோவும், எண் ஒன்பதும்:

துபாய் மெட்ரோவின் வரலாற்றில் ஒன்பது ஒரு தனித்துவமான எண்ணாகும்,  9-9-2009 அன்று இரவு 9 மணிக்கு துபாய் மெட்ரோ சரியாக 9-வது நிமிடத்தில் 9-வது வினாடியில் முதல் முறையாக துபாய் மெட்ரோ அறிமுகமானது. இதையே, ப்ளூ லைனிற்கும் அமல்படுத்த ஆணையம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும், துபாய் மெட்ரோவின் 20வது ஆண்டு நிறைவில் ப்ளூ லைன் அறிமுகப்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பு.

என்ன திட்டம்?

மொத்தம் 30 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த திட்டத்தின் நெட்வொர்க்கில், 14 நிலையங்கள் அடங்கும் அதில், 28 ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 2030 ஆம் ஆண்டில் 200,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும், 2040 ஆம் ஆண்டில் 320,000 பயணிகள் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெட்வொர்க் இரு திசைகளிலும் ஒரு மணி நேரத்திற்கு 46,000 பயணிகளை ஏற்றிச் செல்லும், மேலும் இந்த சேவை செய்யும் பாதைகளில் போக்குவரத்து நெரிசலை 20 சதவீதம் குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு?

இந்த திட்டமானது துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கும் முக்கிய நகர்ப்புறங்களுக்கும் இடையேயான இணைப்பை வழங்கும், பயண நேர இடைவெளி  10 முதல் 25 நிமிடங்கள் வரை இருக்கும். இத்திட்டம் நகரின் ஒன்பது முக்கிய பகுதிகளான Mirdif, Al Warqa, International City 1 and 2, Dubai Silicon Oasis, Academic City, Ras Al Khor Industrial Area, Dubai Creek Harbour மற்றும் Dubai Festival City ஆகியவற்றை உள்ளடக்குகிறது. 

ஜூலை மாதத்தில், சில துபாய் குடியிருப்பாளர்கள் கலீஜ் டைம்ஸிடம் பேசியபோது புதிய திட்டம் குறித்து தங்கள் நிம்மதியை வெளிப்படுத்தினர், மேலும் இது செலவுகளைக் குறைப்பதற்கும் சேமிப்பதற்கும் எவ்வாறு உதவும் என்பது பற்றியும் கூறினார்.

புதிய மேம்பட்ட டிசைன்கள்:

தற்போது பயன்பாட்டில் உள்ள ரெட் மற்றும் கிரீன் லைன்களுடன் ஒப்பிடும் போது, ப்ளூ லைனில் உள்ள புதிய மெட்ரோ நிலையங்கள் நேர்த்தியான, எதிர்கால வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிலையங்களின் வடிவமைப்பு ஒரு மென்மையான, தனித்துவமான கட்டமைப்பைக் கொண்டிருக்கும். முக்கிய தளம் ஒரு பெரிய, ஓவல் வடிவமைப்பால் மூடப்பட்டிருக்கும். இருபுறமும் வெளியேறும் வகையில் இடங்களைக் கொண்ட கட்டமைப்புகள், வளைந்த வடிவமைப்புகளுடன் நவீன, சமச்சீர் அழகியலை பொறுத்து வடிவமைக்கப்படும்.

எகிறும் ப்ராப்பர்ட்டி விலை?

International City, Silicon Oasis, Ras Al Khor, Mirdif, Al Warqa மற்றும் பல பகுதிகளில் ப்ளூ லைன் கட்டுமானப் பணிகளால் ப்ராப்பர்ட்டி விலை உயர உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மெட்ரோ பாதை நிலையங்களுக்கு அருகிலுள்ள நிலம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு  25 சதவீதம் வரை உயரும் என்று சாலைகள் மற்றும் போக்குவரக்த்து ஆணையம் தெரிவித்துள்ளது.