அபுதாபியில் கட்டப்படும் மசூதிகளுக்கு 7 எமிரேட்களின் பெயர்; அதிபர் உத்தரவு!

தேசிய ஒற்றுமையை உணர்த்தும் வகையில் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட 7 மசூதிகளுக்கு ஏழு எமிரேட்டுகளின் பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மசூதிகளுக்கு எமிரேட்களின் பெயர்:

அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், 54வது தேசிய தினத்தை (ஈத் அல் எதிஹாட்) கொண்டாடும் முன்னிட்டு, அபுதாபியில் உள்ள ஏழு மசூதிகளுக்கு அமீரகத்தின் ஏழு எமிரேட்களின்  பெயர்களைச் சூட்ட உத்தரவிட்டுள்ளார்.

எப்போது திறக்கப்படும்?

இந்த ஏழு மசூதிகளிலும் மொத்தம் 6,000 பேர் தொழுகை நடத்தலாம். இது சுமார் 12,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்த மசூதிகள் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நவீனத்துவமும் பாரம்பரியமும் இணைந்த அடையாளம் 

இது குறித்து இஸ்லாமிய விவகாரங்கள், வக்புகள் மற்றும் சகாத் பொது ஆணையத்தின் தலைவர் டாக்டர் ஒமர் ஹப்தூர் அல் தாரேய், இந்த முடிவைப் பாராட்டி, இது தேசத்தின் மதிப்புகளையும் ஒற்றுமையின் உணர்வையும் எதிர்கால சந்ததியினரிடம் எடுத்துச் செல்லும் அதிபரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர், அதிபரது உத்தரவின்படி, அபுதாபியில் உள்ள முகமது பின் சயீத் நகரில் உள்ள ஏழு மசூதிகளுக்கு ஏழு எமிரேட்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.

இந்த மசூதிகள், இஸ்லாமியக் கலை மற்றும் பாரம்பரியத்துடன் நவீன வடிவமைப்பையும் இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன என்றும், அதிபர் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி என்றும் மக்களுக்கு அமைதியான சூழலை அளிப்பதாகவும் அவர் கூறினார்.