ஈரான் தாக்குதலுக்கு 12 நாடுகள் கடும் கண்டனம்: ரியாத்தில் அவசர கூட்டம்!

வளைகுடா நாடுகள் (GCC), அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மார்ச் 18 அன்று  சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, எகிப்து, பாகிஸ்தான், ஜோர்டான் உள்ளிட்ட 12 நாடுகளின் அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர். அஜர்பைஜான், துருக்கி, ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்த நாடுகள் ஒருமனதாகக் கண்டித்தன.

குறிப்பாக, குடியிருப்பு பகுதிகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற சிவிலியன் கட்டமைப்புகளை ஈரான் இலக்கு வைப்பது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

ஈரானுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்

இந்த கூட்டு அறிக்கையில் ஈரானுக்கு சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் தனது அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை தவிர்த்து, அண்டை நாடுகளின் எல்லைப் பாதுகாப்பை மதிக்க வேண்டும்.

அரபு நாடுகளில் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்குவதை ஈரான் நிறுத்த வேண்டும்.

ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டேப் பகுதிகளில் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் விவகாரம்

இந்த கூட்டத்தில் லெபனான் நாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. லெபனான் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே ஆயுதங்கள் இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதே வேளையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களையும், அதன் ஆக்கிரமிப்பு கொள்கைகளையும் அமைச்சர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

தற்காப்பு உரிமை:

ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது விதியின் கீழ், தங்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் முழு உரிமை உண்டு என்பதை இந்த நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின. பிராந்தியத்தின் அமைதியை நிலைநாட்ட தேவையான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

TAGGED: