அமீரகத்தில் கோடை வெப்பம் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த வாரத்திலும் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பநிலை நீடிக்கும் என தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.
மேற்கு கடலோரப் பகுதிகளில் இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சில இடங்களில் பனிமூட்டம் அல்லது மூடுபனி உருவாகக்கூடும். தென்கிழக்கு முதல் வடகிழக்கு திசையில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
எந்த பகுதிகளில் எவ்வளவு வெப்பம்?
• நாட்டின் உள்பகுதிகள் – 40°C முதல் 46°C வரை
• கடலோர மற்றும் தீவுப் பகுதிகள் – 37°C முதல் 43°C வரை
• மலைப்பகுதிகள் – 31°C முதல் 36°C வரை
அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் நிலை பொதுவாக அமைதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையும் பெரும்பாலும் வானிலை சீராக இருக்கும். எனினும், வடமேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 40 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். இதனால் அரேபிய வளைகுடா பகுதியில் கடல் அலைகள் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கிழக்கு பகுதிகளில் ஓரளவு மேகமூட்டம் காணப்படலாம். அதே நேரத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஈரப்பதம் தொடர்ந்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் வேகம் பொதுவாக மிதமாக இருந்தாலும், சில நேரங்களில் மணிக்கு 35 கி.மீ வரை அதிகரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கிழக்கு பகுதிகளில் மேகங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புதன்கிழமை அதிகாலை நேரத்தில் சில கடலோர பகுதிகளில் மீண்டும் பனிமூட்டம் உருவாகக்கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
