🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

உலகின் சிறந்த நகரம் நோக்கி துபாய்: புதிய திட்டத்தில் பிளானில் மலிவு கல்வி, மேம்பட்ட மருத்துவ சேவைகள்!

துபாயை உலகின் மிக அழகான, வாழக்கூடிய, மற்றும் ஆரோக்கியமான நகரங்களில் ஒன்றாக மாற்றும் நோக்கில் விரிவான புதிய திட்டத்திற்கு துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்தத் திட்டங்கள் 2025ஆம் ஆண்டின் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆண்டு அரசாங்கக் கூட்டங்களின் ஒரு பகுதியாக நடந்த துபாய் நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன. 

முக்கிய திட்டங்கள்:

15,000 புதிய வேலை வாய்ப்புகள், குறைந்த கட்டணப் பள்ளிகள், ஆரம்பகால புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் அடங்கும்.  

குறைவான கட்டண பள்ளிகள்:  

துபாயை கல்வித் தரத்தில் உலகின் முதல் பத்து நகரங்களில் ஒன்றாக உயர்த்துவதே ‘மலிவான மற்றும் உயர்தரப் பள்ளிகளை விரிவாக்கும் திட்டத்தின்  நோக்கம். 

துபாய் கல்வி உத்தி 2033-ன் கீழ், 2033ஆம் ஆண்டுக்குள் சுமார் 60 புதிய மலிவுப் பள்ளிகளை ஈர்ப்பது, சுமார் 1,20,000 புதிய கல்வி இடங்களைச் சேர்ப்பது, முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நில குத்தகைக் கட்டணங்கள் உட்பட அரசாங்கக் கட்டணங்களைக் குறைப்பதற்கான சலுகைகளை வழங்குவது ஆகியன அடங்கும். 

பொதுப் பூங்காக்கள் & பசுமை உத்தி

துபாயை உலகின் மிக அழகான மற்றும் வாழக்கூடிய நகரங்களில் ஒன்றாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘பொதுப் பூங்காக்கள் மற்றும் பசுமை உத்தி’ (Public Parks and Greenery Strategy) என்ற மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 800க்கும் மேற்பட்ட திட்டங்களை உள்ளடக்கிய  இத்திட்டத்தில் 310 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படும், தற்போதுள்ள 322 பூங்காக்கள் மேம்படுத்தப்படும், 120 புதிய திறந்தவெளிகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சாலைகளின் ஓரங்களில் பசுமையாக்குதல் (roads’ rights-of-way) பணிகள் நடைபெறும்.

14 தொழில்நுட்பத் திட்டங்களும் இதில் அடங்கும். 2040-ஆம் ஆண்டுக்குள் அடையப்பட வேண்டிய முக்கிய இலக்குகளாக  துபாயில் உள்ள மரங்களின் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்துவது, 187 சதுர கிலோமீட்டர் பசுமைப் பகுதிகளை உருவாக்குவது, இதன் மூலம் ஒரு நபருக்கு 11 சதுர மீட்டர் பசுமைப் பகுதி கிடைக்கும்.

ஆண்டுக்கு பூங்காக்களுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கையை 95 மில்லியனாக உயர்த்துவது. பாசனத்திற்காக 100% மறுசுழற்சி செய்யப்பட்ட நீரைப் பயன்படுத்துவது. இந்தத் திட்டம் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. 

துபாய் குடியிருப்பாளர்களில் 80% பேர் தங்களது குடியிருப்புப் பகுதி பூங்காவிற்கு ஐந்து நிமிட நடை தூரத்தில் வாழ வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது. மாவட்டப் பூங்காவிற்கு பத்து நிமிட சைக்கிள் பயணத் தூரத்தில் வசிப்பதை இலக்காகக் கொண்டது.

ஆரம்ப கால நோய்க் கண்டறிதல்

துபாயை ஆரோக்கியமான ஆயுட்காலம் கொண்ட  உலகின் முதல் பத்து நகரங்களில் இடம்பெறச் செய்யும் இலக்குடன், எமிராட்டிகளுக்கான ஆரம்ப கால சுகாதாரப் பரிசோதனை சேவைகளை விரிவுபடுத்துவதற்கான திட்டம் நிர்வாகக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், தற்போது துபாயில் ஏற்படும் இறப்புகளில் 52% பங்களிக்கும் நாள்பட்ட  நோய்களைக் குறைப்பதாகும். 

இந்த விரிவாக்கப்பட்ட சுகாதார சேவைத் திட்டம் பின்வரும் முக்கிய அளவீடுகளை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. 

குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப கால கண்டறிதலை 40% உயர்த்துவது. தடுப்பூசி வழங்கும் சேவைகளை 50% அதிகரிப்பது. ஆரம்ப கால கண்டறிதல் சேவைகள் குறித்த நோயாளி திருப்தியை 90%க்கும் அதிகமாக அடைவது.

ஆரம்ப கால கண்டறிதலுக்கான அப்பாயிண்ட்மென்ட் காத்திருப்பு நேரத்தை ஏழு நாட்களாக அல்லது அதற்கும் குறைவாகக் குறைப்பது. இந்தச் சுகாதாரத் திட்டம்  குடிமக்களின் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும்.

துபாயின் விமானப் போக்குவரத்துத் திறன் 33

துபாயை உலகின் விமானப் போக்குவரத்து தலைநகராக மேலும் வலுப்படுத்தும் இலக்குடன், நிர்வாகக் கவுன்சில் ‘விமானப் போக்குவரத்துத் திறன் 33’ (Aviation Talent 33) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், துபாய் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட துபாயின் அனைத்து விமான நிலையங்களிலும் உலகத் தரம் வாய்ந்த செயல்பாடுகளை வழங்குவதற்குத் தேவையான திறன்கள், தொழில்நுட்பத் தலைமை மற்றும் ஆயத்த நிலையை உறுதி செய்வதாகும்.

இந்த முன்முயற்சியின் கீழ் 15,000க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குதல், தலைமை மற்றும் செயல்பாட்டுப் பதவிகளில் எமிராட்டிமயமாக்கலை (Emiratisation) ஊக்குவித்தல், 4,000க்கும் அதிகமான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை அளித்தல், ‘Aviation Talent 33’ வலையமைப்பின் ஒரு பகுதியாக, விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் 30க்கும் மேற்பட்ட கூட்டாண்மைகளை உருவாக்குதல் ஆகிய இலக்குகள் எட்டப்படவுள்ளன. 

துபாயின் பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்துதல், AED 650 பில்லியன் முதலீட்டை ஈர்த்தல். தனியார் துறையில் 65,000 எமிராட்டி குடிமக்களைச் சேர்ப்பது ஆகியன அடங்கும்.

துபாயின் விளையாட்டுத் துறை உத்தி 2033:  

துபாய் நிர்வாகக் கவுன்சில், துபாய் விளையாட்டு கவுன்சிலால் உருவாக்கப்பட்ட ‘விளையாட்டுத் துறை மூலோபாயத் திட்டம் 2033’ (Sports Sector Strategic Plan 2033)-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் துபாயை உலகின் முன்னணி விளையாட்டு மையமாக மாற்றுவதாகும்.

இந்த திட்டம் நான்கு முக்கிய துறைகளில் கவனம் செலுத்துகிறது. உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகளை ஈர்ப்பது,  துபாயில் உள்ள விளையாட்டு கிளப்புகளுக்கு ஆதரவளித்து வலுப்படுத்துதல், இளம் விளையாட்டுத் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தல், பொதுமக்கள் அனைவரும் விளையாட்டுகளில் 

சுறுசுறுப்புடன் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. 

இந்தத் திட்டம் மொத்தம் 19 திட்டங்களையும் 75 முன்முயற்சிகளையும் உள்ளடக்கியது. இது 17 முன்னுரிமை விளையாட்டுகளை மையமாகக் கொண்டு செயல்படும். இது சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதிய நிதி மறுசீரமைப்பு மற்றும் திவால் நீதிமன்றம்

துபாய் நிர்வாகக் கவுன்சில், நிதி மறுசீரமைப்பு மற்றும் திவால் நீதிமன்றத்தை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. துபாயை உலகின் முதல் மூன்று நிதி மையங்களில் ஒன்றாக மாற்றும் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது.

இந்த புதிய நீதிமன்றம் குறிப்பாக நிதி மறுசீரமைப்பு (Financial Reorganization) விண்ணப்பங்கள் மற்றும் வழக்குகளைக் கையாளும். திவால் (Bankruptcy) தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் வழக்குகளை விசாரிப்பதில் நிபுணத்துவம் பெறும்.

வணிக சூழலை மேம்படுத்துவதன் மூலம் துபாய்க்கு அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பது, வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் கடன்களை முறையாகத் தீர்க்க உதவுவது, சொத்துக்களைக் கலைப்பதை தவிர்ப்பது, மறுசீரமைப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல் ஆகியவை இதன் நோக்கமாகும். 

இது  துபாயின் நிதிச் சந்தையில் ஸ்திரத்தன்மையையும், நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TAGGED: