🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த கல்வியாளர்களுக்கு கோல்டன் விசா!

துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் ஆணையின் படி,  200-க்கும் மேற்பட்ட சிறந்த கல்வியாளர்களுக்கு நீண்ட கால ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த கல்வியாளர்களுக்கு கோல்டன் விசா:

உலக ஆசிரியர் தினமான அக்டோபர் 5, 2025 அன்று, துபாய்  இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், துபாயில் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு கோல்டன் விசா வழங்க உத்தரவிட்டார். இதன் மூலம், முதல் கட்டமாக 223 சிறந்த கல்வியாளர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருந்து 157 கல்வியாளர்கள் மற்றும் பணியாளர்கள், பல்கலைக்கழகங்களில் இருந்து 60 பேர், குழந்தைகள் மையங்களில் இருந்து 6 பேர் என மொத்தம் 223 சிறந்த கல்வியாளர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

கல்வியாளர்களின் தகுதி, இனம், பாலினம் அல்லது பணி அனுபவத்தின் அடிப்படையில் இல்லாமல், முழுக்க முழுக்க அவர்களின் திறமை மற்றும் பங்களிப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்வு நடைபெற்றது.

தேர்வுக்கு முக்கியமாகக் கருதப்பட்ட அம்சங்கள்:

  • தொழில்முறை கல்வித் தகுதிகள்.
  • சிறப்பான சாதனைகள் மற்றும் தாக்கம்.
  • கல்வி மற்றும் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்புகள்.
  • மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தினரின் நேர்மறை கருத்துக்கள்.
  • தேசிய அல்லது சர்வதேச விருதுகள் பெற்றவர்கள், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டவர்கள் மற்றும் சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

துபாயின் ‘கல்வி 33’ திட்டத்தின் ஒரு பகுதி

ஆசிரியர்களுக்கான இந்த கோல்டன் விசா திட்டம், துபாயின் ‘கல்வி 33 (E33)’ என்ற உத்தியின் முக்கியப் பகுதியாகும். இது துபாயை உலகளாவிய கல்வித் திறமைகளுக்கான மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கல்வி மற்றும் மனித மேம்பாட்டு ஆணையத்தின் (KHDA) இயக்குநர் ஜெனரல் ஆய்ஷா மிரான், “ஆசிரியர்கள் தான் ஒரு வெற்றிகரமான கல்வி அமைப்பின் இதயம்” என்று குறிப்பிட்டார். இந்த விசா, கற்பித்தல் தொழிலின் மதிப்பை உயர்த்தி, எதிர்கால சந்ததியினருக்கு இந்தத் துறையை மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்றும் என்றும் அவர் கூறினார்.

அடுத்த சுற்று விண்ணப்பம் திறப்பு

கோல்டன் விசாவுக்கான இரண்டாவது சுற்று விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள தனியார் குழந்தைகள் மையங்கள், பள்ளிகள் மற்றும் சர்வதேச உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15, 2025 வரை இரண்டு மாதங்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளது.

ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியுரிமைத் திட்டம் ஆகும். முதலீடு, அறிவியல், மருத்துவம், தொழில்முனைவோர் மற்றும் தற்போது கல்வி போன்ற முக்கியத் துறைகளில் உள்ள சிறந்த திறமையாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் இது 2019-ல் தொடங்கப்பட்டது.

தகுதிவாய்ந்த நபர்களுக்கு 10 ஆண்டுகள் வரை புதுப்பிக்கக்கூடிய குடியுரிமை வழங்கப்படுகிறது. இதன் மூலம், உள்ளூர் ஸ்பான்சர் இல்லாமலேயே ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழலாம், வேலை செய்யலாம், படிக்கலாம் மற்றும் சுதந்திரமாகப் பயணம் செய்யலாம்.
மே 12, 2025 சர்வதேச செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு துபாய் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாய் ஹெல்த் அமைப்பில் பணியாற்றிய செவிலியர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கோல்டன் விசா வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.