🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

வாடகை செலுத்த முடியாமல் தவிக்கும் குடும்பங்களுக்கு நிதியுதவி; துபாய் அரசு புதிய முயற்சி!

துபாயில் வாடகை செலுத்த முடியாமல் தவிக்கும் எமிராட்டி குடும்பங்களுக்கு உதவ AED 10 மில்லியன் நிதியுதவி வழங்கும் ‘Sitr’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரக அரசு, 2026-ஆம் ஆண்டை “குடும்பங்களின் ஆண்டு” (Year of the Family) என்று அறிவித்துள்ளது. சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்களின் பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும். 

அதன் ஒரு பகுதியாகவே, துபாய் வாடகை விவகாரங்கள் மையம் (RDC) மற்றும் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறக்கட்டளை இணைந்து இந்த திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

வாடகை நிலுவை தொடர்பான வழக்குகளில் சிக்கித் தவிக்கும் 111 வாடகைதாரர்கள் விடுவிக்கப்படுவார்கள். 

நிலுவையில் உள்ள சுமார் 187 அமலாக்க வழக்குகளுக்கு இந்த நிதியின் மூலம் தீர்வு காணப்படும்.

நிதி நெருக்கடியில் உள்ள 232 தகுதியுள்ள எமிராட்டி குடும்பங்களுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்படும்.

ஏன் இந்தத் திட்டம்?

கடந்த நான்கு ஆண்டுகளில் துபாயில் வாடகை விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மக்களின் வருமானத்தில் பெரும்பகுதி வாடகைக்கே செலவாவதால், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியை குறைக்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

“எங்கள் பணி வெறும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மட்டுமல்ல, கஷ்டப்படும் குடும்பங்களுக்கு துணையாக நிற்பதும் தான்” என்று துபாய் வாடகை விவகாரங்கள் மையத்தின் தலைவர் நீதிபதி அப்துல்காதர் மூசா முகமது தெரிவித்துள்ளார்.