திங்கள்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மழைப்பொழிவு வரும் மார்ச் 27 (வெள்ளிக்கிழமை) வரை பல்வேறு நிலைகளில் தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிகமான மழைப்பொழிவு:
அமீரகத்தின் சில பகுதிகளில் வழக்கத்தை விட மிக அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அபுதாபி மற்றும் அஜ்மான் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது.
திங்கட்கிழமை இரவு வரை பதிவான மழைப்பொழிவு விவரம்:
அல் மனாமா (அஜ்மான்): 93.3 மி.மீ
கயாதி (அபுதாபி): 91.0 மி.மீ
அல் வத்பா (அபுதாபி): 88.2 மி.மீ
முகமது பின் சையத் சிட்டி (அபுதாபி): 78.7 மி.மீ
அல் ருவைஸ் (அபுதாபி): 75.7 மி.மீ
மழை
மழை முதலில் நாட்டின் மேற்குப் பகுதியான அல் தஃபராவில் (Al Dhafra) தொடங்கி, பின்னர் படிப்படியாக அபுதாபி நகரம் மற்றும் உள்நோக்கி நகர்ந்தது. பிற்பகலில் துபாயின் ஜெபல் அலி மற்றும் அல் பர்ஷா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மாலையில் புஜைரா மற்றும் ராஸ் அல் கைமா உள்ளிட்ட வடக்கு எமிரேட்களிலும் மழை தீவிரமடைந்தது.
வாராந்திர வானிலை முன்னறிவிப்பு:
வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த வாரம் முழுவதும் வானிலை சீரற்றதாகவே இருக்கும்.
செவ்வாய் (மார்ச் 24): நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்யும். இரவில் கடலோர மற்றும் தீவு பகுதிகளில் மழை நீடிக்கும்.
புதன் (மார்ச் 25): பகல் நேரத்தில் பரவலாக மழை பெய்யும். இரவு நேரத்தில் அல் அய்ன் மற்றும் கிழக்கு பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
வியாழன் (மார்ச் 26): காலையில் மழை சற்று குறைந்தாலும், மதியம் மற்றும் மாலையில் மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிரம் காட்டும்.
வெள்ளி (மார்ச் 27): காலையில் கடலோரப் பகுதிகளில் தொடங்கும் மழை, பிற்பகலுக்குப் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கும். இரவு நேரத்திற்குள் வானிலை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்:
தாழ்வான பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வாகன ஓட்டிகள் சாலைகளில் தேங்கியுள்ள நீரைக் கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
