உலகளாவிய பசியைப் போக்க உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழத் தொழிற்சாலை – துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு!

துபாய் ஆட்சியாளர் உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழத் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளார்.

மிகப்பெரிய பேரீச்சம்பழத் தொழிற்சாலை

துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், உலகளாவிய பசியை ஒழிக்கும் நோக்கில் ‘1 Billion Meals Dates Factory’ என்ற உலகின் மிகப்பெரிய பேரீச்சம்பழத் தொழிற்சாலையை துபாயில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நலிவடைந்த மக்களுக்காக: 

இந்தத் திட்டம் முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் இனிஷியேட்டிவ்ஸ் அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஆலை மூலம், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நலிவடைந்த மக்களை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் 150 மில்லியன் பேரீச்சம்பழ அடிப்படையிலான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரீச்சம்பழ மரம் ஆசீர்வாதம்

இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், “இறைவன் அமீரகத்திற்கு பேரீச்சம்பழ மரத்தை ஒரு ஆசீர்வாதமாக வழங்கியுள்ளார். இதையே நம்பி நாம் வாழ்ந்தோம். இன்று, உலகளாவிய பசியை ஒழிக்க உதவும் வகையில், இதனை உயர்ந்த ஊட்டச்சத்து மதிப்புடைய உணவுப் பொருளாக மாற்ற முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.