2025 ஜூலை மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட First-Time Home Buyer Programme-ன் மூலம், கடந்த ஓராண்டிற்குள் 3,200-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் துபாயில் முதல் முறையாக வீடு வாங்கியுள்ளனர்.
துபாயில் கடந்த ஓராண்டிற்குள் மட்டும் 3,200-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் முதன்முறையாக தங்களது சொந்த வீடுகளை வாங்கியுள்ளனர். துபாய் நிலத் துறை (DLD) மற்றும் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை (DET) ஆகிய துறைகள் இணைந்து கடந்த 2025 ஜூலை மாதம் தொடங்கிய First-Time Home Buyer Programme மூலமே இது சாத்தியமாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே துபாயில் வாடகை வீடுகளில் வசித்து வந்த வெளிநாட்டவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள், தற்போது நீண்ட கால அடிப்படையில் இங்கையே முதலீடு செய்து சொந்த வீடு வாங்குவதை விரும்ப தொடங்கியுள்ளனர். அரசின் இந்த First-Time Home Buyer Programme, வாடகைதாரர்கள் தங்களை வீட்டு உரிமையாளர்களாக மாற்றிக் கொள்ள ஒரு பெரும் பாலமாக அமைந்து வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களும், தனிநபர்களும் துபாய் மண்ணில் தங்களது முதல் சொந்த வீட்டு கனவை நனவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
AED 5 பில்லியன் பரிவர்த்தனை
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே, இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட குடியிருப்பு சொத்து பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு AED 5 பில்லியனைத் தாண்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இதுகுறித்து துபாய் நிலத் துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ள அமோக வரவேற்பு, துபாயில் சொந்த வீடு வாங்குவதற்கான ஆர்வம் எவ்வளவு அதிகமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. துபாயை வெறும் சர்வதேச வணிக மற்றும் சுற்றுலா மையமாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் நிரந்தரமாக வாழத் தேர்வு செய்யும் பாதுகாப்பான, நிலையான மற்றும் தரமான வாழ்விடமாக மாற்றுவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்” என்று தெரிவித்தனர்.
