துபாயில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை இனி DubaiNow செயலி மூலம் ஆன்லைனில் எளிதாக பதிவு செய்யலாம்.
தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக டிஜிட்டல் துபாய் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பணியாளர்கள் தங்கள் நிறுவனம் அல்லது முதலாளிகளுக்கு எதிரான வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களை விரைவாகவும் எளிதாகவும் ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.
தொழிலாளர்களின் குரல்
துபாய் அரசின் அதிகாரப்பூர்வ DubaiNow செயலியில் “Worker’s Voice” (தொழிலாளர்களின் குரல்) என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாய் காவல்துறை உருவாக்கியுள்ள இந்த சேவையின் மூலம், தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் வேலைவாய்ப்பு தொடர்பான புகார்களையும், கருத்துகளையும் எளிதாக பதிவு செய்ய முடியும்.
எந்த மாதிரியான புகார்களை அளிக்கலாம்?
- சம்பளம் வழங்காதது அல்லது சம்பளப் பிரச்சனைகள்.
- வேலை செய்யும் இடத்தில் உள்ள மோசமான நிலைமைகள்.
- தொழிலாளர்களுக்கான தங்குமிட பிரச்சனைகள்
- பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள்.
இந்தச் சேவையின் மூலம், ஒரு தொழிலாளி தனிப்பட்ட முறையில் தனது புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், பல தொழிலாளர்கள் இணைந்து கூட்டுப் புகாரையும் சமர்ப்பிக்க முடியும். இந்த புதிய வசதியால், புகார் அளிப்பதற்காக அரசு அலுவலகங்கள் அல்லது சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே டிஜிட்டல் முறையில் எளிதாக புகார்களை பதிவு செய்ய முடியும்.
